99

1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பாளர்களில் கக்கனும் ஓருவர். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.25,000/-க்குக் காசோலையை முன்கூட்டியே கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறைப்படியே மதுரைப் பாரமலை அவர்களையும் பணத்திற்கான காசோலையைக் கட்டுமாறு பணித்தார் கக்கன். ‘நான் காசோலை வேண்டுமானால் தருகிறேன். ஆனால் வங்கியில் அதற்கான பணம் வழங்கப்படவில்லை என்றால் நான் பொறுப்பல்ல’ என்று வேடிக்கையாகச் சொன்னார் பாரமலை. இதோ பார் ஆண்டிப்பட்டி ‘நல்லகாம் கட்டிவிட்டார். அதுபோல் நீயும் கட்டிவிடு’ என்று கக்கன் சொன்னதும் ‘யார் வேண்டுமானாலும் காசோலை கொடுக்கலாம். ஆனால், அதை ஏற்று வங்கி பணம் வழங்க வேண்டுமே’ என்றார் பாரமலை. ‘என்னப்பா இது? காசோலை கொடுத்தால் பணம் கொடுத்துத் தானே ஆகணும்? நீ சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ என்றார் கக்கன். அது பின்னால் தெரியும் என்பதோடு அமைதியானார் பாரமலை.

அடுத்த கொஞ்சநாளில் கக்கனும் பாரமலையும் காரில் சென்று கொண்டிருக்கும்போது பாரமலையைப் பார்த்து ‘நீ சொன்னது சரிதான்’ என்றார் கக்கன். ‘எதைச் சொல்கிறீர்கள்’ என்று பாரமலை கேட்டதும் ஆண்டிப்பட்டி “நல்லகாம்” கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லை என்ற காரணம் காட்டித் திரும்ப வந்து விட்டது என்ற செய்தியை விளக்கினார் கக்கன்.

1964ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் போன்ற பொறுப்புகளில் இருந்த கக்கனுக்கு வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே காசோலை வழங்கலாம் என்ற செய்தி தெரியவில்லை. பணம் இருந்தால் தான் காசோலை வழங்க வேண்டும், இல்லையேல் வழங்கக்கூடாது என்ற உண்மையான சிந்தனை மட்டுமே கக்கனின் நெஞ்சம் பெற்றிருந்தது. வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கள்ளத்தனமாகக் காசோலை வழங்கிப் பிறரை ஏமாற்றலாம் என்பது உள்ளிட்ட பல தவறான செயலுக்குரிய எண்ணம் அவர் நெஞ்சம் கொண்டதே இல்லை. தமது நெஞ்சம் அறிய ஒரு பொய்யான செயலை எந்தச் சூழலிலும் செய்யக்கூடாது என்ற உயர்ந்த உள்ளம் இருந்தமையால் தான் அவ்வாறான சிந்தனைக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தார் என்ற இச்செய்தியை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பாரமலை அவர்கள் நெஞ்சாரப் புகழ்ந்து மகிழ்கிறார்.

அரசியல்வாதிகள் என்றாலே பொய்யான பல செயல்களைச் செய்பவர்கள் என்ற சிந்தனையுடைய மக்களிடையே வாழ்ந்த கக்கன், ‘தன் நெஞ்சறியப் பொய்யற்க’ என்ற தடத்தில் தமது அரசியல் வாகனத்தைத் தடம் புரளாமல் செலுத்தினார். அதனால்தான் மக்கள் மனம் என்ற விண்ணுலகில் இன்னும் மின்னும் விண்மீனாய்த் திகழ்கிறாரோ?

வாழ்ந்தால் நெருப்பைப்போல் வாழ வேண்டும்; அது அணைந்து போகக்கூடத் தயாராக இருக்கும்; குளிர்ந்து போகத்தயாராய் இருக்காது”.

டாக்டர் மு..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book