98
ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அம்மனிதனின் நடைமுறைப் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமையும். தாம் கடந்து வந்த பாதை சரியான பாதை என்றால் அம்மனிதன் தமது வாழ்நாளில் தாழ்வைச் சந்திக்கமாட்டான். அப்படித் தாழ்வு வரும் காலத்திலும் தமது நல்வழி நடையில் மாற்றம் பெறாதவன் மக்களால் மதிக்கப்படுகிறான். இந்த வகையில் கக்கன் கடந்து வந்த பாதையையும், தாழ்வு வந்த காலத்தில் தன் நிலை மாறா உள்ளத்தையும் எடை போட்டுப் பார்த்தால்தான் அவரது உண்மையான வண்ணமும் உருவமும் விளங்கும்.
பொதுத்தொண்டனாக, விடுதலை வீரனாக, அரசியல் தலைவனாக, மாநிலக்கட்சித் தலைவனாக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக இப்படிப் பல நிலைகளையும் கடந்து வந்த இவர் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று நுணுகிப் பார்ப்பது அவரது பண்பாட்டை உள்ளம் என்ற உரைகல்லில் உரைத்துத் தரம் பார்ப்பது போலாகும். அப்போதுதான் கக்கனின் வாழ்க்கை நடையில் எத்துணைத் தரம் வாய்ந்த பண்பாடு ஒளிந்து கிடக்கிறது என்பதை முழுமையாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.