85
மரணம் என்பது உலக வாழ்க்கையில் எழுதி வைக்கப்படாத தீர்ப்பு என்றாலும் இவரது மரணம் பல தலைவர்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அன்றைய அகில இந்திய இந்திரா காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருப்பையா மூப்பனார், மாநிலக் காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம், அன்றைய காங்கிரஸின் மேலவைத் தலைவராக இருந்த திண்டிவனம் இராமமூர்த்தி, காங்கிரசின் முன்னாள் மாநிலத் தலைவர் எல். இளையபெருமாள் ஆகியோர் இரங்கற் செய்தி வெளியிட்டனர். “சிறந்த தேசபக்தர் ஒருவரை எளிய வாழ்க்கையை மேற்கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சிறந்த தலைவரைத் தமிழ்நாடு இழந்து விட்டது” என்று அச்செய்திகள் கண்ணீர் விட்டன.
கக்கன் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் “தமிழக மக்களுடைய பேரன்பைப் பெற்றிருந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழந்தவருமான கக்கன் மறைவுக்குக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் வெளியாகும் அனைத்துச் செய்தித்தாள்களும் கக்கனின் மறைவுச் செய்தியை வெளியிட்டன.
மாநிலக் கவர்னர் எல். எஸ்.குரானா, முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் நம்பியார், சுலோசனா சம்பத், பாடகர் டி.எம். சௌந்தரராஜன், நடிகர் வி.கே.இராமசாமி ஆகியோர் நேரில் வந்து கண்ணீரைக் காணிக்கையாக்கினர்.
இவரது மறைவைக் கேள்வியுற்ற பித்துக்குளி முருகதாஸ் தம் மனைவியுடன் வந்திருந்து கண்ணீர் மல்கப் பார்த்தார். உடல் அடக்கம் செய்யும்போது இரங்கல் பாக்களைப்பாடித் தமது மனவுணர்வினை வெளிப்படுத்தினார்.
“ஒருவரின் பிரிவினால் நம் மனதில் சோகம் சூழ்ந்து, அவரைப்பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை”.
– எழுத்தாளர் ஜெயகாந்தன்