72
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு நாள் போன்ற விழா நாட்களில் உறவினர்களோ, நண்பர்களோ, கட்சித் தொண்டர்களோ கொண்டு வரும் பழங்கள், இனிப்புகள் முதலானவற்றைக் கூட ஆதி திராவிட மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு என் அப்பா அனுப்பி விடுவார். அவருக்குக் கூட்டங்களில் கிடைக்கும் வாழ்த்துப் பரிசுகள், பொன்னாடைகள் போன்றவற்றை விற்றுக் காங்கிரஸ் கட்சியின் கணக்கில் சேர்த்து விடுவார்.
அன்பளிப்புகள் விலை உயர்ந்தவையாக இருந்தால் அவற்றை அரசின் கணக்கில் பதிவுசெய்து விடுவார்.
“Mr. Gandhi what is your message?” என்று ஒருவர் கேட்டபோது, “My life itself is a message!” என்றாராம் மகாத்மா காந்தியடிகள்.
அவருடைய கொள்கை நெடுஞ்சாலையிலேயே பீடுநடை போட்ட திரு. கக்கன் அவர்களும் தமது வாழ்வையே நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட நற்செய்தியாகத் (Good message) தொண்டுகள் புரிந்து, நூற்றுக்கு நூறு சிறந்த காந்தியவாதியாகத் திகழ்ந்தவர் ஆவார்.
ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் தளராத உடும்புப் பிடிப்பு, களங்கம் அற்ற கண்ணிய அரசியல் நெறி, அதிகார விளிம்பிற்குள் நின்று ஆணவமே இல்லாமல் செயலாற்றும் திறமை – இப்படிப் பல அரிய இயல்புகள் படைத்தவரே முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள்.
மக்களால் வழங்கப்படும் பதவிகளின் பெயரால் ஆற்றும் எல்லாச் செயல்களும், நாட்டின் பல துறை வளர்ச்சிக்கும், நலிவுற்ற மக்களின் நலன்களுக்கும், சமுதாய நல்லிணக்க மேம்பாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு, பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டியவரே திரு. கக்கன் அவர்கள்!