71
வைக்காதவர்
அவரது அந்த வாழ்க்கைப் போக்கிலிருந்து நான் உணர்ந்துகொண்ட பாடம், எவ்வளவு உயர்ந்த பதவிக்குச் சென்றாலும், பண வளத்தை அடைந்தாலும், ஆடம்பரம் இல்லாத சிக்கனம் என்பதைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்தது என்று கற்றுக்கொண்டேன்.
நான் சிறுமியாக இருந்தபோது, தாம் ஊர்களுக்குப் போகும்பொழுது பணம் இல்லாவிட்டால், என்னிடம் கூட வாங்கிச் செல்வார். ஊரில் இருந்து திரும்பியவுடன் அதிகமாகவே பணம் கொடுப்பார்.
என் தந்தையாருக்கு எந்த வங்கியிலும் கணக்கு கிடையாது. வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகம் (பேங்க் பாஸ் புக்) எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்த ஒரு விந்தையான அமைச்சரே திரு. கக்கன் அவர்கள்!
என் தந்தையார் அமைச்சராக இருந்தபோது, அரசாங்க விழாக்கள், ஆளுநர் தரும் விருந்துகள் ஆகியவற்றுக்கு மட்டும் அம்மாவையும் பிள்ளைகளையும் அரசின் காரில் கூட்டிச் செல்வார். மற்ற நேரங்களில், மற்ற நிகழ்ச்சிகளுக்குப் பேருந்தில்தான் எங்கள் குடும்பத்தினர் வெளியே செல்வோம்.
அந்தப் பெருமகனார் அமைச்சர் பதவி ஏற்றிருந்த காலத்தில் கடைசிவரை, நாங்கள் விமானம் என்னும் வானூர்தியில் பயணம் செய்ததே இல்லை!
“ஒரு மனிதனின் வெற்றி என்பது அவனது பணப்பெட்டியில் இல்லை. மனப் பண்பில் இருக்கிறது”.
– சுவாமி சிவானந்தர்