69
எங்களைக் கப்பலில் ஏற்றி வழி அனுப்ப என் தந்தை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தார். அப்போது, கப்பல் வாரிய முகவர் (Shipping Corporation Agent) திரு. ஹாஜா ஷெரிஃப் அவர்களின் ‘அந்தமான்’ என்னும் பெயருடைய கப்பலில் என் கணவரும் நானும் பயணம் செய்ய இருந்தோம்.
எங்களுடன் வந்த என் அப்பாவைப் பார்த்ததும் திரு. ஷெரிஃப் அவர்கள் இவரை அன்புடன் வரவேற்றார்.
‘நீங்களும் அந்தமான் செல்லுங்கள்’ என்று கூறினார்.
‘நான் மாற்றுத் துணிகள் எடுத்து வரவில்லை. டிக்கெட்டுக்குப் பணமும் என்னிடம் இப்போது இல்லை’ என்று சிரித்தபடி என் தந்தையார் சொன்னார்.
‘அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்து தருகிறேன்’ என்று ஹாஜா ஷெரிஃப் கூறினார்.
ஆனால், நெறிமுறை தவறாத இந்த முன்னாள் அமைச்சர், அந்த இனிய நண்பரின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார்!
என் கணவரையும் என்னையும் கண்ணீர் மல்க கப்பலில் என் அப்பா வழியனுப்பி வைத்த அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அப்படி நாங்கள் அந்தமான் செல்லும்போது, இரண்டு கொசு வலைகளை அவர் வாங்கிக் கொடுத்தார். ஏனென்றால், அந்தத் தீவில் கொசுக்கள் அதிகம் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
நாங்களும் கைச் செலவுக்கு ரூ.600/- (ரூபாய் அறுநூறு மட்டும்) எடுத்துக் கொண்டு முதல் முறையாகக் கடல் கடந்து அந்தமான் சென்றோம்.