67
என் சகோதரர் எம்.ஏ.பட்டம் பெற்றவர். அரசு நடத்திய தேர்வில் வெற்றியடைந்து கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர் (டெபுடி–ரிஜிஸ்தாரர்) பணியில் சேர்ந்தார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், ‘மந்திரி மகன் என்பதால் அவருக்கு அரசில் உயர் பதவியா?’ என்று கேள்வி எழுப்பினார்.
முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்றபின், அரசு நடத்திய தேர்வில் முறையாகப் பங்கேற்று நிறைய மதிப்பெண்கள் பெற்ற தகுதியின் அடிப்படையில்தான் அமைச்சரின் மகனுக்கு அரசுப் பணி கிடைத்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைப்பற்றிக் கேள்வியுற்ற அறிஞர் அண்ணா அவர்கள், “திரு. கக்கன் அவர்கள் மாதிரி ஓர் அமைச்சர் நேர்மையாக இருந்து விட்டால், எதிர்க்கட்சிகளுக்கு வேலையே இருக்காது” என்று என் தந்தையின் நேர்மையை நெஞ்சாரப் பாராட்டினார்.
எங்கள் திருமணத்துக்கு முன்பே என் கணவர் திரு. சிவசுவாமி அவர்கள் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக (ஜூனியர் எஞ்சினியர்) வேலை செய்தவர் ஆவார். அதனால், அவர் பெயர் உதவிப் பொறியாளர் பதவி உயர்வுக்காகத் தமிழ்நாடு அரசு அலுவலர் தேர்வாணைக் குழுவின் உயர் பதவித் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. என்னைத் திருமணம் செய்த பிறகு, பணி உயர்வு கிடைக்கும் என்று என் கணவரின் உறவினர்களும் என் கணவரும் நினைத்தனர்.
ஆனால், அதைப் பற்றிய பேச்சு வந்தபோது, என் தந்தையாரோ, ‘அவருக்குப் ‘புரமோஷன்’ வரும்போது வரட்டும். அவரது பதவி உயர்வுக்காக நான் சிபாரிசு செய்யமாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.