64
எனது திருமணம் 1964 சனவரி மாதம் 20 ஆம் நாள் நடைபெறுவதற்குப் பெரியவர்கள் கூடி உறுதி செய்தார்கள். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னால் துணிக் கடைக்குச் சென்று இரண்டு பட்டுப் புடவைகள் எடுத்து வந்தேன். திருமண நாளைக்கு முதல் நாள் மாலை என் தந்தை வீடு வந்ததும் புடவையைக் காண்பிக்கச் சொன்னார். அம்மாவும் நானும் மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துவந்து காண்பித்தோம்.
‘என்ன இது! புடவை பள பள என்று இருக்கிறதே! கதர்ப் புடவை மாதிரி இல்லையே?’ என்று அப்பா திகைப்புடன் கேட்டார்.
‘இது காஞ்சிபுரம் பட்டுப் புடவை. நிச்சயதார்த்தத்துக்கு மட்டுமே இதைக் கட்டிக் கொள்வேன்’ என்று கூறினேன்.
‘நீ காங்கிரஸ்காரன் பெண் தானே? நானோ காந்தியவாதி. அவருடைய கொள்கைக்கு உண்மையாக வாழ்பவன். அதனால், நீ உடனே கதர்க் கடைக்குச் சென்று, கதிரிலேயே பட்டுப் புடவை எடுத்து வந்து, திருமணத்தில் கட்டிக் கொண்டு மனையில் உட்கார வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் அப்பா.
பிறகு என்ன! திரும்பவும் கதர்க் கடைக்கே சென்று புடவை எடுத்து வந்து அதை அணிந்துகொண்டுதான் மணமேடையில் அமர்ந்தேன். எனது மணவிழா, சென்னை – கிரீன்வேஸ் சாலையில் அமைச்சராகிய என் தந்தைக்கு அரசு ஒதுக்கிய வீட்டில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
என் அப்பா, தாம் கடைப்பிடித்த காந்தியக் கொள்கையில் கடுகு அளவும் மாறாத உறுதி பூண்டவர். அதனால்தான் தாம் ஓர் உண்மையான காங்கிரஸ் போராளி என்பதை என் திருமணத்திலும் நிரூபித்துக் காட்டினார்.
எளிமை பற்றி நாம் பேசவும், எழுதவும் தயங்குவதில்லை. ஆனால், அப்படி வாழத்தான் தயங்குகிறோம்.
– டாக்டர் மு.வ.