57
“மதிப்புக்குரிய சகோதரர்கள் இராசயன உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்தியில் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியாது என்று சொன்னார்கள், மதிப்புக்குரிய சீமைச்சாமி அவர்களும் கரியமாணிக்கம் அம்பலம் அவர்களும் அவ்வாறு குறிப்பிட்டார்கள். அதை நான் ஒத்துக்கொள்ளமுடியாது. இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகத்தான் எல்லா ஜில்லாக்களிலும் நல்ல விளைச்சல் கண்டிருக்கிறது.
சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதியினர் விவசாயப் பெருமக்கள் தான். இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக, உற்பத்தி அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை முடிவுசெய்யும் தீர்ப்பை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
தஞ்சையில் பாக்கேஜ் ஸ்கீமில் (ஒருமித்த செயல்முறைத் திட்டப்படி) அதிகப்படியாக உற்பத்தியான காரணத்தில்தான், பஞ்ச காலத்தில் டன் டன்னாக அரிசியை மக்களுக்குக் கொடுக்க முடிந்தது. இதையெல்லாம் கனம் அங்கத்தினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இரசாயன உரத்தால் பலன் இல்லை என்று சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
‘விவசாயப் பெருமக்களுக்குக் கால்நடை (விலங்குகள்) மேய்ச்சல் நிலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேய்ச்சல் நிலங்களைச் சிலர் ஆக்கிரமித்து விட்டார்கள். பழச்செடி வைக்கப் பஞ்சாயத்திலிருந்து எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று மதிப்புக்குரிய கரியமாணிக்க அம்பலம் அவர்கள் கூறினார்கள். இதைப்பற்றி அச்சடித்துக் கொடுத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்தாலே தெரியும்.
தழை உர உற்பத்தி திருப்திகரமாக இல்லாமல் இருப்பதைத் தெரிந்து, அதற்கென ஒரு முன்னோடித் திட்டம் குறிப்பிட்ட சில கிராமப் பஞ்சாயத்துகளில் 1963-64 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஒவ்வொன்றுக்கும் கிணறு வெட்டவும், பம்பு செட்டுகள் (நீர்க்குழாய் யந்திரங்கள்) பொருத்தவும், ரூ.5,500/- நீண்டகால உதவி அளிக்கப்படுகிறது. குறுகிய காலக் கடனாக ரூ.1,000/- அளிக்கப்படுகிறது. விவசாய மேஸ்திரி (மேற்பார்வையாளர்) ஒருவருடைய சேவையையும் இனாமாக அளித்து, தழை உர விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்திட்டத்தை மேலும் நீட்டித்து, 1965-66 ஆண்டுகிளல் 30 புதிய இடங்களில் அமலாக்கப்படும்”.
இவ்வாறு பேரவையில் உர உற்பத்தி பற்றிய உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பொறுப்பான முறையில் பதில் அளித்துச் சிறப்பாகத் தமது கடமை ஆற்றிய பெருமை அமைச்சர் கக்கன் அவர்களைச் சாரும்.