55

திப்பிற்குரிய கனம் சபாநாயகர் அவர்களே! நேற்றைய தினம் (22.03.1965) இந்த முக்கியமான, பெருமை பொருந்திய விவசாய மானியத்தின் கீழ் பல அங்கத்தினர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். சில நல்ல ஆலோசனைகளும் கூறியிருக்கிறார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

அந்த நல்ல ஆலோசனைகள் எல்லாம் அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்படும். அதன் மூலமாகப் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும்பொழுது அரசாங்கம் மிகவும் சந்தோஷம் அடையும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

உணவு, உற்பத்தியைப் பொருத்தமட்டில், நம்முடைய மாநிலத்திலே தொடர்ந்து வெற்றியைக் கண்டு கொண்டு வருகிறோம் என்பதை மதிப்பிற்கு உரிய அங்கத்தினர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் நாம் ‘டார்ஜெட் பிக்ஸ்’ பண்ணும் பொழுது அடைந்திருக்கிற ‘அச்சீவ்மெண்டை’ (சாதனை) பார்ப்பதைவிட, மொத்தமாக ஐந்து வருடங்களிலும் நாம் கொண்டிருக்கிற லட்சியத்தை எவ்வாறு அடைய வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். ‘‘அச்சீவ்மெண்ட்’ குறைந்து விட்டால் நாம் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதில் அர்த்தமே (பொருளே) இல்லை!

திட்டம் என்பதே ஐந்து வருடங்களில் எவ்வாறு வெற்றி காணமுடியும் என்ன வெற்றி கண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதுதான். அப்படிப் பார்த்தால் நம்முடைய மாநிலத்திலே உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் 1961ஆம் ஆண்டில் நம்முடைய டார்ஜெட் 3.1டன் என்று போட்டிருந்தாலும், அச்சீவ்மெண்ட் (சாதனை) 2.27டன் ஆகியிருக்கிறது.

1963-64 ஆண்டுகளில் பார்க்கும்போது, 2.26 டன் என்று நாம் போட்டிருந்தாலும் 2.70 டன் ஆகியிருக்கிறது. அதாவது கூடுதலாக ஆகியிருக்கிறது.

அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் பொது மக்களின் ஒத்துழைப்புடனும் எவ்வளவு தூரம் உணவு உற்பத்தியைப் பெருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய அரசாங்கம் முன்வரும். எப்போதுமே நினைத்த மாதிரி எதுவும் நடந்துவிடாது. நினைப்பதை நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

உணவு உற்பத்தியைப் பொருத்தமட்டில், அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், பல வழிகளில் ஒத்தாசை தேவையாக இருக்கிறது. மண் வளம் நன்றாக இருக்க வேண்டும். பருவ மழை நன்றாக இருந்து பாசன வசதி சிறப்பாக இருக்க வேண்டும். பொறுக்கு விதைகள் நல்ல முறையில் கொடுக்கப்பட வேண்டும். அதே சமயத்தில், பயிருக்கு நோய் வராமல் தடுக்க, பயிர்ப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதே சமயத்தில், விவசாயிகளுக்கு (உழவர்களுக்கு)க் கடன் உதவி செய்ய வேண்டும்.

விவசாயப் பெருமக்களில் பெரும்பகுதியினர் ஏழை மக்கள்தான். அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய தானியத்துக்கு நல்ல விலை கிடைக்கக் கூடிய வகையில் ‘மார்க்கெட்’டிங்குக்கு (பங்கு விற்பனைக்கு) அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முறையில் அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்யப் பாடுபட்டு வருகிறது.

கன்னியாகுமரி ஜில்லாவில் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காகப் பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மதிப்பிற்குரிய சிதம்பரநாத நாடார் அவர்கள் சொன்னார்கள். பி.டபிள்யு.டி (பொதுப் பணித் துறை) மூலமாகப் பரிசீலனை செய்து, அங்கே பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது. கன்னியாகுமரி ஜில்லா நம்முடைய தமிழகத்தினோடு சேர்ந்த பிறகு, நல்லமுறையில் அந்த வட்டாரத்தில் பல ஒத்தாசை உதவிகளைச் செய்து, பல பெரிய திட்டங்களை எல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக, மதிப்பிற்குரிய திரு. அர்த்தநாரீசுவர கவுண்டர் அவர்கள் பேசும்போது, விதைப் பண்ணைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். சாதாரணமாக விதைப் பண்ணையிலிருந்து விதைகளைக் கொடுக்கும்போது, அவற்றை நன்றாகப் பரிசீலித்து, சரியாக முளைக்கிறதா இல்லையா என்பதைச் சோதனை செய்து பார்த்த பின்னால்தான் விவசாயப் பெருமக்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் கட்டளை இட்டிருக்கிறது. அவர்கள் பொதுவாகச் சொன்னார்கள்.

அப்படி இல்லாமல், எந்தப் பண்ணையில் யாரிடத்தில் எப்போது வாங்கினர்கள் என்பதைச் சொன்னால், ஏன் அவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றி என்னால் விசாரிக்க முடியும்’.

திரு. கே. எஸ் அர்த்தநாரிசுவர கவுண்டர்:

கனம் சபாநாயகர் அவர்களே!

என்னுடைய ஊரின் பக்கத்தில் உள்ள அம்மாப்பேட்டை (சேலம் மாவட்டம்) பிர்க்காவில் இருக்கும் பஞ்சாயத்து யூனியனில் ஐந்து மூட்டை விதைகள் வாங்கினேன். அவற்றை 50 சென்ட் நிலத்தில் போட்டும் கூட, சரியாக வரவில்லை. இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

மாண்புமிகு அமைச்சர் பூ. கக்கன்:

கனம் அங்கத்தினர் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டபோது, அந்த விதைப் பண்ணையில் விதைகளைப் பரிசீலனைச் செய்து பார்த்தீர்களா என்று கேட்க வேண்டும். இதையெல்லாம் நிச்சயமாக நான் விசாரிக்கிறேன். ஏதோ சொல்லித் தட்டிக்கழிக்க நான் தயாராக இல்லை. ஆனால், இதை வைத்துக்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

புலவர் கா. கோவிந்தன் (தி.மு..):

இது ஒரு இடத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.

மாண்புமிகு அமைச்சர் பூ. கக்கன்:

எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஒன்றிரண்டு இடங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொன்னால் அதை நான் விசாரிக்கிறேன்.

விதை வழங்கும்போது பரீட்சார்த்தமாகப் (சோதனை முறையாக) பார்த்துப் பரிசீலனை செய்த பின்னால்தான் அதாவது, விதை முளைக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்த பின்னால் தான் விதைகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கட்டளை இட்டிருக்கிறது.

ஒருவேளை பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற கிராம உதவியாளர்கள் மூலம் ஏதாவது தில்லுமுல்லுகள் ஏற்பட்டு இருக்கின்றதா என்பதையும் விசாரிக்க வேண்டும். இப்போது இம்மாதிரியான தவறுகள் ஏற்படக்கூடாது என்று அரசாங்கம் தக்க ஏற்பாடு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான பதில் கூறுவதன் மூலம் எதுவும் தவறு நடக்க வில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயலாமல் உண்மையை எதிர் கொள்ளத் தயாராயிருக்கும் பண்பு கக்கனுக்கு இருந்திருக்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book