47
ஒருமுறை தம் மக்களுடன் உதகமண்டலம் சென்று தங்கியிருந்தார். அப்போது அங்கிருக்கும் இந்துஸ்தான் புகைப்பட (Hindusthan Photo Films)நிறுவன அதிகாரி இவரைப் பார்க்க வந்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த கக்கனின் மகன்கள் இயற்கைக் காட்சிகளைப் புகழ்ந்து பேசும்போது ‘தொலைநோக்கி வைத்துப் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்’ என்று கூறினர். இதை மனத்தில் வைத்திருந்த அந்த அதிகாரி தொலைநோக்கி ஒன்றை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அடுத்த நாள் ‘தொலைநோக்கி ஏது?’ என்று கக்கன் கேட்டார். பிள்ளைகள் உதகமண்டலத்தில் கிடைத்த உண்மையைக் கூறினர். ‘அப்படியானால் அதை இங்கு கொடு’ என்று வாங்கி தமது பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டார். அடுத்த முறை உதகமண்டலம் சுற்றுப்பயணம் செல்லும்போது அந்த இந்துஸ்தான் நிறுவனத்தின் அதிகாரியை அழைத்து தொலைநோக்கியைத் திருப்பிக் கொடுத்தார். ‘இதற்காகவா என்னை அழைத்தீர்கள்’ என்று கூறியதோடு ‘இது பிள்ளைகளுக்கு விளையாட்டிற்காகக் கொடுத்தது. இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா?’ என்று அந்த அதிகாரிக் கேட்டார். ‘அமைச்சரின் பிள்ளைகள் என்பதால் தான் தாங்கள் வழங்கினீர்கள். யார் எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை என் பிள்ளைகளுக்கு வந்து விடக்கூடாது. அதனால்தான் இதைத் திருப்பிக் கொடுக்கிறேன்’ என்றார் கக்கன். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி ‘இப்படியொரு அமைச்சரா?’ என்று வியப்பான பார்வையுடன் வெளியே வந்தார்.
இந்தத் தொலைநோக்கியை மகிழ்வோடு பெற்ற கக்கனின் மகன் டாக்டர் சத்தியநாதன் இன்றும் இதை மகிழ்ச்சி பொங்கக் கூறிப் பெருமைப்படுகிறார். இந்த நேர்மைக்குப் பெயர் தான் கக்கன்.
பதவிக்காக வரும் எந்தப் பொருளையும் ஏற்றுக் கொள்வது ‘தன்மானமற்ற அரசியல் திருட்டு’ என்று எண்ணி அம்மாதிரிச் செயல்களிலிருந்து தம்மை அப்புறப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார். இதற்கு ஆதாரமாக இன்னொரு செய்தியையும் இங்குச் சொல்லலாம்.