40
இங்கு இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். மணிவிழா நிதிஉதவியில் ரூ.11,000 மைனருக்குக் கொடுத்தாகி விட்டது. மீதம் 10,000 ரூபாய் இருக்கிறது. இதைக் குடும்ப உறுப்பினர்கள் வங்கி நிரந்தர வைப்பு நிதியில் இட்டு விடலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், கக்கன் அதிலிருந்து ரூ.1,800 எடுத்து ஓர் ஆளை அழைத்து இதைக் கொண்டு போய் டி.வி.எஸ்.பயணியர் விடுதியில் கொடுத்து விட்டுப் பற்றுச் சீட்டையும் வாங்கி வரச்சொன்னார். வீட்டிலிருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஏன் கொடுத்து அனுப்புகிறீர்கள்’ என்று கேட்டதும் மெல்ல சிரித்துக் கொண்டு ‘நான் அமைச்சராயிருந்த காலத்தில் அந்த விடுதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அப்படியே இருந்து விட்டது. அதை இன்று தான் கொடுத்து அனுப்புகிறேன்’என்றார்.
‘அமைச்சராகியிருந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த நிறுவனத்தாரும் அதைக் கேட்கவேயில்லை; கேட்கவும் மாட்டார்கள். இந்த நிலையில் ஏன் கொடுத்து அனுப்புகிறீர்கள்’ என்றனர். ‘என்றாவது ஒருநாள் அந்த நிலுவைத் தொகையை நான் கட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் இன்று வரை கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி சொல்லி பணத்தைக் கட்ட வேண்டுமே தவிர கேட்கவில்லை என்பதற்காகக் கட்டாமல் இருப்பது தவறு’ என்று கூறினார்.
இவ்வளவு வறுமையில் இருந்தபோதும் இவர் மாறவில்லை என்று சிலர் முணுமுணுத்தனர். அவர் கொண்டிருந்த திருந்திய உள்ளத்தால்தான் வறுமையில் செம்மையாக நடந்துக் காட்ட முடிந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.
கிடைத்த பொருளுதவியைக் கொண்டு தமது வறுமை நிலையை மாற்றிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருந்த போதும்.
‘கோடான கோடி பெற்றாலும் தன்
நாக்கோடாமை கோடி பெறும்’
என்ற அவ்வையின் வாக்கினை உணர்ந்தவராக நடந்து கொண்டார் கக்கன், என்பதை என்ணிடும் போது
‘இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்
குன்ற வருப விடல்’
என்ற வள்ளுவரின் வாக்கே நினைவுக்கு வருகிறது.