38
ஐந்தாண்டுக் காலம் நாடாளுமன்ற உறுப்பினர், பத்தாண்டு காலம் அமைச்சர் பொறுப்பில் இருந்து விட்டு 1967 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கப் பணமில்லாமல் கக்கன் திகைத்துப் போனார். பல நண்பர்கள் தாமே முன்வந்து உதவி செய்தனர். அந்த உதவிகள் போதாத காரணத்தால் நாவினிப்பட்டி மைனரிடம் ஆள் அனுப்பினார். கக்கன் அனுப்பியதாகத் தெரிந்ததும், தன் கையில் இருந்த 11,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பினார். நாவினிப்பட்டி மைனர் மிகப்பெரிய செல்வர். கக்கனின் மீது மிகுந்த அன்புடையவர். அதனால், ‘இதைக் கொடுத்து விட்டு இன்னும் வேண்டுமென்றால் ஆள் அனுப்பி வைக்கவும்’ என்ற செய்தியையும் சொல்லி அனுப்பினார்.
தேர்தல் முடிந்தது; கக்கனும் தோற்றுப்போனார். மாதச் சம்பளமில்லை; மக்களால் வருவாயில்லை; சென்னையில் வாழ்வதே கடினமாக சூழல். வறுமை சூழ்ந்த அந்த வேளையில் பல நல்ல உள்ளங்களின் உதவியால் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தார். காலம் கடந்தே கக்கனுக்கு உதவவேண்டும் என்று பல தலைவர்களுக்குத் தோன்றியது. மணிவிழா என்ற பெயரில் விழா நடத்தி பொருளுதவி செய்ய திட்டமிடப்பட்டு, மதுரை நெடுமாறன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, மணிவிழா மிகச்சிறப்பாகத் தமுக்கம் மைதானத்தில் நடத்தப்பட்டது. திரு.சி.சுப்பிரமணியம் விழாவில் கலந்து கொண்டு கக்கனுக்குத் தங்கச்சங்கிலி பரிசளித்துச் சிறப்பித்தார்.
அம்மணிவிழா நடத்திய செலவுகள் போக மீதமுள்ள 21,000ரூபாயைப் பணமுடிப்பாகக் கக்கனுக்கு வழங்கினார்கள்.