37
‘தியாகி கக்கன்ஜி நினைவுக் கல்வி கலாச்சார மன்றம்’ என்ற ஓர் அமைப்பின் தொடக்க விழா சென்னை தேவநேயப் பாவாணர் மத்திய நூலகக் கட்டடத்தில் எளிமையாக நடந்தது. விழாவைத் தொடங்கி வைத்த கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் சொன்ன செய்தி.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக, உணவு அமைச்சராக, காவல் துறை அமைச்சராக, இப்படிப் பல இலாகாக்களின் அமைச்சராகக் கக்கன் பணிபுரிந்திருந்தாலும், அவரை யாரும் முன்னாள் அமைச்சர் என்று குறிப்பிட்டது கிடையாது. அவரைத் தியாகி கக்கன்ஜி என்றே அழைத்து வந்தனர். அமைச்சர் பந்தா எதுவும் இல்லாமல் மந்திரியாக இருந்தவர் அவர். எனக்கு வேலை கிடைக்கும் வரை கொஞ்ச நாள் நான் எனது சகோதரர் கக்கனின் வீட்டில் (அமைச்சர்களுக்கான பங்களாவில்) தங்கியிருந்தேன். கொஞ்சநாளில் எனக்கு நெடுஞ்சாலைத் துறையில் வேலை கிடைத்தது. எனக்கு வேலை கிடைத்த செய்தி எனது சகோதரர் கக்கனுக்குத் தெரியாது. நான் வேலையில் சேர்ந்த பிறகும் எனது சகோதரரின் பங்களாவிலேயே தங்கியிருந்தேன். நான் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த என் சகோதரர், ‘இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று என்னைக் கேட்டார். அப்போதுதான் நான், இரண்டு வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்குச் சேர்ந்த விவரத்தைச் சொன்னேன். உடனே ‘அரசாங்க ஊழியனாகி, அரசு ஊதியம் வாங்கத் துவங்கிய பிறகு அமைச்சர் வீட்டில் இருப்பது தவறு. உடனே புறப்படு’ என்று எனது பெட்டி படுக்கை எல்லாம் மூட்டை கட்டி அந்த நள்ளிரவில் என்னை வெளியே அனுப்பிவிட்டார். ‘நள்ளிரவு ஆகிவிட்டது’ எங்குப் போய்த் தங்குவது? காலையில் போய்விடுகிறேன்’ என்று கெஞ்சியும் கூட அவர் பிடிவாதமாக என்னை வெளியேற்றி விட்டார் என்றார்.
இதைக் கேட்டபோது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.