34
ஏதோ ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கக்கன் வீடு திரும்புகிறார். மகிழுந்து அவர்தம் வீட்டின் மதில் சுவர் கதவுகளைத் தாண்டும் போது தம் பணியாளர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவதைப் பார்த்து விட்டு, ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். மண்ணெண்ணெய் எடுத்துச், செல்லும் அந்தப் பணியாளரை அழைத்து ‘இது யாருக்கு?’ என்று கேட்டார். ‘நம்ம வீட்டிற்குத்தான்’ என்றவுடன் ‘யார் வாங்கி வரச் சொன்னது?’ என்றார் கக்கன். ‘ அம்மாதான் வாங்கி வரச் சொன்னார்கள்’ என்று அந்தப் பணியாளர் சொன்னதும் கக்கன் முகம் கோபத்தால் வெளிர்ந்தது. உடனே ஓட்டுநரை விட்டு தம் மனைவியை அழைத்து வரச் சொன்னார். இதற்கிடையில் இந்த மண்ணெண்ணெய்ப் பாத்திரத்தை மதிற்சுவருக்கு வெளியே வைக்க சொன்னார். தயங்கிய பணியாளருக்கு நல்ல திட்டு கிடைத்தது. வேறு வழியின்றி அப்பணியாளரும் அந்த மண்ணெண்ணெய்ப் பாத்திரத்தை மதிலுக்கு வெளியே சாலையில் வைத்தார். இவரைப் பார்க்க வீட்டிற்கு வந்த பார்வையாளர்கள், காவலர்கள் அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
தமது மனைவி வந்ததும் அந்தப் பணியாளரைக் காட்டி ‘இவர் யார் தெரியுமா? அரசு ஊழியர், உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல’ என்று தொடங்கித் திட்ட வேண்டியதெல்லாம் திட்டி முடித்தார். பலர் முன்னிலையில் இவ்வாறு நடந்து கொண்டதால் கக்கனின் மனைவி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். ‘அதோ ரோட்டில் உனது மண்ணெண்ணெய் இருக்கிறது, எடுத்துக் கொண்டு போ, இனி அரசுப் பணியாளர்களை உனது சொந்த வேலைக்குப் பயன்படுத்தாதே’ என்று ஆணையிட்டார். அந்த அம்மையாரும் அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அதுவரை, அங்கேயே நின்றுவிட்டுப் பிறகுதான் வீட்டிற்குள் வந்தார் கக்கன். இதைக் கண்ணுற்ற பணியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை மௌனமாக அழாமல் அழுதனர். இதனைக் கண்ணுற்ற கக்கனின் தம்பி விஸ்வநாதகக்கனும் அன்று நடந்ததை இன்றும் நினைவு கூர்கிறார். அரசுப் பணியாளர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றிருந்தால் இந்த நாடு எவ்வளவோ வளர்ந்திருக்கும் என்று எண்ணும் உள்ளம் மக்களிடையே வளர்ந்திருந்தாலும் உண்மையாக
நடக்கும் அத்திப்பூக்களில் கக்கனும் ஒருவர்.