32
இந்திய அரசியல் வரலாற்றில் 1969ஆம் ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க ஆண்டு எனச் சொல்ல வேண்டும். நூற்றாண்டு காணப்போகும் காங்கிரஸ் கட்சியில் இந்த ஆண்டில் தான் பிளவு ஏற்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, நீலம் சஞ்சவிரெட்டியை வேட்பாளராக அறிவித்தது. இந்தியத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கட்சியின் முடிவை எதிர்த்து வி.வி.கிரியை வேட்பாளராக அறிவித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காமராசர் போட்டியைத் தவிர்க்க முயன்றார். ஆனால், முடியவில்லை. ‘தலைமை அமைச்சர் கொடுத்த ஆணைப்படியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவரவர் மனச்சாட்சிப்படியே வாக்களிக்கச் சொல்லிவிட்டேன்’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தாலும், தலைமை அமைச்சர் இந்திரா காந்தியின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றி பெற்றார்.
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திராகாந்தியின் மீது குற்றம்சாட்டிக் கட்சியின் மேலிடம் நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் பின்னணியில் காங்கிரஸ் பிளவுபட்டது.
இந்திராகாந்தியால் பழைமைவாதிகள் என்று விமர்சிக்கப்பட்ட கட்சிச் செயற்குழு முழுவதும் ‘காங்கிரஸ் ‘ஒ’ என்றும் இந்திராகாந்தியைத் தலைவராகக் கொண்டு இயங்கிய அணிக்குக் ‘காங்கிரஸ் ‘ஐ’ என்றும் பெயரிடப்பட்டுத் தனித்தனியாக இயங்கத் தொடங்கின.
காமராசரை என்றென்றும் தமது தலைவராகக் கொண்ட கக்கன், காமராசர் அணியிலேயே நின்று காமராசரின் கரங்களை வலுப்படுத்தினார். கட்சியின் தலைமை இட்ட ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்தார். காமராசர் தலைமைதான், கட்சியின் வளர்ச்சிக்கும், நாட்டின் நலனுக்கும் நல்லது என்று எண்ணினார். காமராசர் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் ‘ஒ’ என்ற அமைப்பில் பொறுப்பேற்றுக் காமராசருக்குத் துணைநின்றார்.