18
தேசியக் காங்கிரஸ் தொடங்கி எழுபது ஆண்டுகள் நிறைவுறும் ஆண்டான 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டைச் சென்னையில் நடத்த கட்சி முடிவு செய்தது. தமிழகத்தின் மாநிலத் தலைவரான கக்கன் அவர்களுக்கு அம்மாநாடு நடத்தும் பொறுப்பினைத் தந்தது. அன்றைய தமிழக முதல்வர் காமராசர் கொடுத்த ஊக்கத்தாலும் உறுதுணையாலும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை ஆவடியில் 21.1.1955 முதல் 23.01.1955 வரை நடைபெற்ற இம்மாநாடு, இதோ ஒரு திறன்மிக்க நிர்வாகி என்று கக்கனின் திறமையை அடையாளம் காட்டியது. அந்தத் தேசிய அளவிலான மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் நேரு பெருமகனார் ஆவார்.
நேரு, கக்கனை அழைக்கும் போதெல்லாம் கக்கன்ஜி (‘ஜி’ என்பது ‘அவர்கள்’ என்பதன் இந்தி வடிவமாகும்). என்றே அழைத்தார். அவர் தந்த ‘ஜி’ என்ற அடைமொழி பிற தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் கக்கன்ஜி என்றே அழைக்கத் தொடங்கினர். மாநாடு நடத்திய விதத்தைப் பாராட்டிய நேருஜி, தரையில் அமர்ந்து மாநாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த பூசாரிக் கக்கனிடம் வந்து நலன் விசாரித்து விட்டு மேடைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரு அவர்களால் அழைக்கப்பட்ட ‘கக்கன்ஜி’ என்ற அப்பெயர் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மக்களாலும் இன்றும் அழைக்கப்படுகின்றன.