10
அவர் செய்து கொண்டிருந்த உண்மையான பொதுத் தொண்டும் சமுதாய வளர்ச்சிப் பணிகளும் மக்களால் மட்டுமல்லாமல் கட்சியின் தலைவர்களாலும் மதிக்கப்பட்டன; அடையாளம் கண்டு கொள்ளப்பட்டன. அதன் விளைவால் மேலூர் வட்டக் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவி இவரைத் தேடி வந்தது. அவரும் 12.07.1940ஆம் நாள் அந்தப் பொறுப்பேற்றார். தாம் பொறுப்புடன் நடத்தி வந்த இரவுப்பள்ளியையும் விட்டு விடாமல் தொடர்ந்து கவனித்து வந்தார்.
முதல் சிறைவாசம்
அப்போது செல்லுமிடமெல்லாம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லி நாட்டுப்பற்றை மக்களிடையே ஏற்படுத்துவதையும், கட்சிக்கொடி நாட்டி, வந்தே மாதரம் (மாநிலத்தாயை வணங்குகிறேன் என்று பொருள்) என்று முழங்குவதையும் அவர்தம் முக்கியப் பணிகளாகக் கொண்டிருந்தார். இதைக் கண்காணித்து வந்த ஆங்கில அரசு 1940-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் நாள் வாஞ்சி நகரம் என்ற ஊரில் கக்கனைக் கைது செய்தது. வந்தே மாதரம் என்று முழங்கியமைக்காகவும் துண்டு அறிக்கைகளைப் பொதுமக்களிடம் வழங்கியமைக்காகவும் 15நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே இவர் பெற்ற முதல் சிறைத் தண்டனையாகும்.
சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானதும் இயக்கப் பணிகளில் மிகவும் ஆர்வம் காட்டினார். ஆங்கில அரசை எதிர்த்து மேடைகளில் பேசுவதும் கட்சித்தலைமை கொடுக்கும் இரகசிய ஆணைகளை நடைமுறைப்படுத்துவம் இவர்தம் செயற்பாடுகளாக இருந்தன. அதன் விளைவாக அவ்வட்டார இளைஞர்கள் கக்கனின் தலைமையில் அணி திரண்டு விடுதலை இயக்கத்தில் சேர்ந்தனர்.